First Published : 23 Jan 2012 12:38:17 PM IST
மயிலாடுதுறை, ஜன. 22: மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே அகல ரயில் பாதை அமைக்க
ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், வழக்குரைஞருமான கே. ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. இந்த மார்க்கத்தில் ரயில் சேவை, பல நிபந்தனைகளுக்கு உள்படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளம் சென்ற கீழ் நிலத்தையும் விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன. புதிய பாதையில் ரயில்வே பாதை அமைக்க மாநில அரசு ரயில்வே துறைக்கு 50 சத தொகையை அளிக்க வேண்டும். இதனால், தமிழகத்தில் பல்வேறு ரயில் பாதை ஆய்வு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி மார்க்கம் தரங்கம்பாடி டேனிஸ் கோட்டை, தில்லையாடி,திருக்கடையூர் போன்ற சுற்றுலா தலங்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பாதையாகவும் உள்ளது. எனவே, இந்த மார்க்கத்தில் ரயில் சேவையைத் தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் முன்வர வேண்டும். எதிர்வரும் ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் இந்த பாதையை சீரமைக்க ரூ. 100 கோடியை ஓதுக்கீடு செய்து, ஓராண்டுக்குள் ரயில் பாதை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக