ஞாயிறு, 4 மார்ச், 2012

மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை

மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கக் கோரிக்கை

First Published : 04 Mar 2012 01:52:31 PM IST


 

பொறையாறு, மார்ச் 3: மயிலாடுதுறை -தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், பொறையாறு மற்றும் சுற்றுவட்டாரப் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு மத்திய அரசு, நாடாளுமன்ற ரயில்வே நிலைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஓ.எஸ். மணியன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
தரங்கம்பாடி -மயிலாடுதுறை வழித்தடத்தில் பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், மன்னம்பந்தல், மயிலாடுதுறை நகரம் வழியாக மயிலாடுதுறை சந்திப்பு வரை பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து இருந்து வந்தது.
1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தினமும் நான்கு முதல் ஆறு முறை ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. இதனால் சென்னை செல்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்தச் சேவை 1986 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இதனால் இப்பகுதியினர் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறைக்கு சென்று ரயில் சேவையை பயன்படுத்த வேண்டியுள்ளது.
இந்தத் தடத்தில் தரங்கம்பாடி, திருக்கடையூர், தில்லையாடி ஆகியவை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களாக உள்ளதால், இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். மன்னம்பந்தல் பொறியியல், தொழில் நுட்ப கல்லூரிகள் உள்ள இடமாகவும், தரங்கம்பாடி வட்டத்தின் தலைமையிடமாக பொறையாறு விளங்குவதாலும் இங்கு ரயில் சேவை அவசியமாகிறது. தற்போது காரைக்காலிலிருந்து சென்னை செல்லும் ரயில் நாகை,திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சுமார் 100 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்கிறது. இதனால் பயண நேரமும், செலவும் விரயமாகிறது.
மயிலாடுதுறை -தரங்கம்பாடி ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டால், காரைக்கால் -தரங்கம்பாடி இடையே 15 கி.மீ தொலைவில் புதிய ரயில் பாதை அமைத்தால் சென்னை செல்வதற்கான நேரமும், செலவும் குறையும். ஆகையால், வரும் பட்ஜெட்டில் இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக